செய்திகள்
ராஜஸ்தானிடம் தோல்வி - ஏ.பி.டி.யை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் மீது கோலி பாய்ச்சல்
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 30 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், பேட்ஸ்மேன்களை கேப்டன் விராட் கோலி கடுமையாக விமர்சித்துள்ளார். #IPL2018 #RRvRCB #Kohli
ஜெய்ப்பூர்:
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியினரின் சிறப்பான பந்துவிச்சினால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 75 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தோம். அதன் பிறகு இந்த மாதிரி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது எங்களுக்கு புதுமையாகவே தெரிந்தது.
பேட்டிங்கில் மிடில்வரிசையை வலுப்படுத்த விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. களத்தில் நீடிக்கும் மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’என்றார்.
ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறுகையில், ‘இந்த ஆடுகளத்தில் 160 ரன்களுக்கு மேல் எடுப்பது மிகவும் கடினமானது என்பதை அறிவோம். பெங்களூரு அணி சிறந்த பேட்டிங் வரிசையை பெற்றிருந்தாலும் எங்களது பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்து அபாரமாக பந்து வீசினர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்’ என்றார். #IPL2018 #RRvRCB #ViratKohli #Kohli #Rahane