செய்திகள்

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற லலிதா பாபருக்கு அரசு வேலை: மராட்டிய அரசு அறிவிப்பு

Published On 2016-08-23 08:37 IST   |   Update On 2016-08-23 08:37:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற லலிதா பாபருக்கு குருப்-1 அதிகாரிக்கு நிகரான அரசு வேலை வழங்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
மும்பை :

ரியோ ஒலிம்பிக் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய போட்டியில் தகுதி சுற்று மூலம் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் பங்கேற்றார். அவர் இதில் 10-வது இடத்தை பெற்று, பதக்கத்தை நழுவ விட்டார். இருந்தாலும், ஒலிம்பிக்கில் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கு அடுத்தபடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறிய 2-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை லலிதா பாபர் பெற்றிருக்கிறார்.

27 வயதான லலிதா பாபர், மராட்டிய மாநிலம் சத்தாராவை சேர்ந்தவர். அவரது இந்த சாதனையை கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், லலிதா பாபருக்கு குருப்-1 அதிகாரிக்கு நிகரான அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதேபோல், லலிதா பாபருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்குவதாக சத்தாராவை சேர்ந்த நாட்டுப்புற நடன கலைஞர் ஒருவர் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, லலிதா பாபருக்கு ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News