சிறப்புக் கட்டுரைகள்

திருமணத்துக்கு முந்தைய கருத்தரிப்பால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

Published On 2025-09-03 14:01 IST   |   Update On 2025-09-03 14:01:00 IST
  • 18 வயதுக்கு கீழே, திருமணத்துக்கு முன்பு ஏற்படும் எந்த கர்ப்பமானாலும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும்.
  • 45 சதவீதமான பெண்கள் கருத்தரித்து 6 வாரத்தில் கருக்கலைப்பு செய்கிறார்கள்.

பெண்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று திருமணத்துக்கு முன்பே கருத்தரித்தல். இது இளம்பெண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினை ஆகும். ஒரு பெண் திருமணத்துக்கு முன்பு கருத்தரிப்பது என்பது சரியா அல்லது தவறா என்பது பற்றி நாம் பார்க்கப் போவதில்லை. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை ஆகும். அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையது. அது நாம் தடுக்கக்கூடிய விஷயம் அல்ல.

18 வயதுக்கு மேல் கருக்கலைப்பு செய்ய சட்டத்தில் இடம் உண்டா?

பெண்கள் கருத்தரிப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்ட வயது என்பது இருக்கிறது. ஒரு பெண் திருமணம் ஆகாத நிலையில் 18 வயதுக்கு முன்பு கருத்தரித்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதில் பாதிக்கப்படும் சிறுமிகள் ஆனாலும் சரி, பாதிப்புக்கு உட்படுத்திய ஆணாக இருந்தாலும் சரி, அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறார்கள்.

மேலும் இந்த விவகாரத்தில் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்து உண்மையை மறைக்கும் அவர்களின் குடும்பத்தினர், இதை சட்டத்துக்கு தெரியப்படுத்தாமல் கருக்கலைப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் என எல்லோருமே இதில் கண்டிப்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வருவார்கள்.

18 வயதுக்கு கீழே, திருமணத்துக்கு முன்பு ஏற்படும் எந்த கர்ப்பமானாலும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும். எனவே 18 வயதுக்கு கீழே கர்ப்பத்துடன் பரிசோதனைக்கோ அல்லது சிகிச்சைக்கோ அல்லது கருக்கலைப்புக்கோ வரும் சிறுமிகள் பற்றி மருத்துவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவிப்பார்கள். இது எல்லாமே அனைத்து மருத்துவர்களுக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஒரு பெண் திருமணம் ஆகி கர்ப்பமாக இருந்தாலும் சரி, திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாக இருந்தாலும் சரி, அவருக்கு 18 வயதுக்கு கீழே இருந்தால், அவர் யாராக இருந்தாலும் சரி, மருத்துவர்களாகிய நாங்களும், போக்சோ சட்டப்படி இதை போலீசாரிடம் தெரியப்படுத்துவோம். இது மருத்துவர்களின் கடமை.

இதுவே 18 வயதை கடந்த ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு கருத்தரித்தால், அவர் அந்த கருவை கலைக்கலாமா என்றால் தாராளமாக கலைக்கலாம். அவர் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. 18 வயதுக்கு மேல் யார் வேண்டுமானாலும் கருக்கலைப்பு செய்யலாம்.

கருக்கலைப்பு செய்வதற்கான சில வழிமுறைகள்?

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிற இந்த கருத்தரித்தல் மற்றும் கருக்கலைப்பு பிரச்சினைகள் தான் ஒரு பெண்ணின் வாழ்க்கையில், குறிப்பாக இளம் பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்தலும், அதை செய்கிற கருக்கலைப்பு முறைகளும் இளம்வயது பெண்களின் இறப்பு, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய பாதிப்புக்கு பெரிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் 1971-ம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு சட்டம் (எம்.டி.பி.) கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் கருக்கலைப்பு முறையானது. ஒரு வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி18 வயதை தாண்டிய பெண்கள் கண்டிப்பாக கருக்கலைப்பு செய்யலாம். அதற்கு அவர்கள் திருமணம் ஆகி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. திருமணத்துக்கு முன்பு அவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு சட்ட ரீதியாக இடம் இருக்கிறது. இது தவறு அல்ல, கண்டிப்பாக பண்ணலாம்.

ஆனால் இந்த கருக்கலைப்பை யார் செய்ய வேண்டும்? எந்த சூழ்நிலையில் செய்ய வேண்டும்? என்ன முறைகளில் செய்ய வேண்டும் என்பதற்கான சில வழிமுறைகள் இருக்கிறது. தகுதி பெற்ற ஒரு மருத்துவர் தான் இந்த கருக்கலைப்பை செய்ய வேண்டும். அந்த மருத்துவர்கள், மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

கருக்கலைப்பு செய்வதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட எந்த மருத்து வரும் 18 வயதை கடந்த பெண்ணுக்கு திருமணமான பிறகு உருவான கருவையோ அல்லது திருமணத்திற்கு முன்பு ஏற்படுகின்ற கருவையோ கலைப்பதற்கு உரிமை உண்டு.

 

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

உலக அளவில் அதிகரித்து வரும் கருக்கலைப்பு?

ஆனால் இன்றைக்கும் உலக அளவில் பார்த்தால், கருக்கலைப்பு என்பது மிகவும் அதிகரித்து வருகிறது. 45 வயதுக்கு கீழே உள்ளவர்களில் நான்கில் ஒரு பெண், ஏதாவது ஒரு காரணத்தால், தேவையில்லாத கர்ப்பம் என்று கருக்கலைப்பு செய்கிறார். இது திருமணமான பிறகு உருவாகும் கர்ப்பம் மட்டுமின்றி, திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம் உள்பட அனைத்துமே அடங்கும்.

இதில் 45 சதவீதமான பெண்கள் கருத்தரித்து 6 வாரத்தில் கருக்கலைப்பு செய்கிறார்கள். அதுவே கிட்டத்தட்ட 50 சதவீதமான பெண்கள் 10 முதல் 15 வாரத்துக்குள் கருக்கலைப்பு செய்கிறார்கள். ஒரு பெண் 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்வதில் எந்தவித தடையும் இல்லை.

இப்போது உள்ள ஒரு புதிய சட்ட திருத்தத்தின்படி சிறப்பு பிரிவாக, பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வது 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். கருவில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது தாய்க்கு ஆபத்து ஏற்பட நேரிட்டாலோ அந்த பெண்களுக்கு 24 வாரத்திலும் கருக்கலைப்பு செய்யலாம்.

ஆனால் ஒவ்வொரு கருக்கலைப்பையும் செய்வதற்கு சில வரைமுறைகள் இருக்கிறது. 12 வாரத்துக்குள் இருக்கும் கருவை கருக்கலைப்பு செய்தால் அதற்கான பயிற்சி பெற்று தகுதி சான்றிதழ் வைத்துள்ள ஒரு மருத்துவர், எல்லா வசதிகளும் இருக்கின்ற ஒரு சரியான மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யலாம்.

ஆனால் அதுவே 12 வாரத்தை தாண்டிய கருவாக இருந்தால், அதை கருக்கலைப்பு செய்ய 2 மருத்துவர்கள் சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த கருவை ஏன் கருக்கலைப்பு செய்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? இந்த கருவளர்ந்தால் கருவுற்ற பெண்ணுக்கு ஏதாவது பிரச்சினைகள் வரலாம், இதனால் அவர் மனதளவில் பாதிக்கப்படலாம், அவர்களின் குடும்பங்களில் பிரச்சினை ஏற்படக்கூடும், அதனால் அந்த பெண் பாதிக்கப்படலாம் என்று உறுதி செய்தால் மட்டுமே இதனை கருக்கலைப்பு செய்ய முடியும்.

மேலும் அந்த கரு வளரும்போது அந்த கருவுக்கு பிரச்சினை வரும். அது நல்ல கருவாக இல்லை, அந்த கரு வளர்ந்து குழந்தையாக பிறந்தாலும் ஆரோக்கியமாக வாழ முடியாது என்று அதை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினால் இந்த கருவை கருக்கலைப்பு செய்யலாம்.

இந்த காரணங்கள் இல்லாமல் கண்டிப்பாக மற்ற எந்த காரணத்துக்காகவும் 12 வாரம் தாண்டிய கருவை ஒரு பெண்ணால் கருக்கலைப்பு செய்வது என்பது இயலாத காரியம். இதெல்லாம் பாதுகாப்பான, சட்ட ரீதியான கருக்கலைப்பு முறைகள். சரியான மருத்துவரிடம் சென்று பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்வது என்பது பாதுகாப்பான சட்டரீதியான கருக்கலைப்பு ஆகும்.

சீரான முறையில் கருக்கலைப்பு செய்தாலும் பிரச்சினைகள் ஏற்படலாம்:

அதே நேரத்தில் இந்த பாதுகாப்பான, சட்ட ரீதியான கருக்கலைப்பும் முழுமையான பாதுகாப்பு கொண்டது தானா என்று கேட்டால் அதிலும் பிரச்சினைகள் வரலாம். அனைத்து வித பரிசோதனைகளையும் செய்து, முக்கியமாக எல்லாவித அடிப்படை பிரச்சினைகளையும் சரி செய்து சீரான முறையில் சிகிச்சை அளித்து கருக்கலைப்பு செய்தால் கூட பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த பிரச்சினைகள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பாக திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் அடையும் பெண்களுக்கு இந்த பாதிப்பானது மிகவும் அதிகமாக இருக்கிறது.

இன்றும், இளம்வயது பெண்களின் ஆரோக்கிய பாதிப்புக்கும், உயிர் இழப்புக்கும் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் கருக்கலைப்பே மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். எனவே இந்த கருக்கலைப்பை எப்படி பாதுகாப்பாக செய்வது? பாதுகாப்பாக கருக்கலைப்பை செய்யும் போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது? இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம். 

Tags:    

Similar News