null
கன்னியாகுமரியில் 6 தொகுதிகளின் அறுவடைக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
- தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் மாவட்டமும் இந்த மாவட்டம்தான்.
- அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளுமே இந்த தொகுதிக்கு அமைச்சர் பிரதிநிதித்துவமும் வழங்கி இருக்கிறது.
கன்னியாகுமரி... இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டம். இந்த மாவட்டம் 1956-ல் உருவாக்கப்பட்டு தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அதுமுதல் சட்டமன்ற தேர்தல்களையும் சந்தித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த 6 தொகுதிகளிலும் தேர்தலில் அறுவடை செய்ய இப்போதே அரசியல் கட்சிகளுக்குள் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதிகளை பற்றிய ஒரு கண்ணோட்டம்.
இந்த தொகுதியில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 968 வாக்காளர்கள் இருக்கிறார்கள். 1971 முதல் இந்த தொகுதியை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி கைப்பற்றி வருகிறது. முதல் முறையாக அமைச்சர் பிரதிநிதியும் இந்த மாவட்டத்தின் தொகுதியில் தான் கிடைத்தது. தற்போது அ.தி.மு.க. கைவசம் இருக்கிறது. தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
எல்லா தேர்தல்களிலும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையேதான் நேரடி போட்டி ஏற்படும். எனவே இந்த முறையும் அந்த மாதிரி சூழல்தான் ஏற்படும் என்பதை உறுதியாக நம்பலாம். அ.தி.மு.க. சார்பில் மீண்டும் தளவாய்சுந்தரமே களம் இறக்கப்படுவார் என்று அந்த கட்சியினர் கூறுகிறார்கள். அவர்கள் தேர்தல் பணிகளையும் தொடங்கி விட்டார்கள். தி.மு.க. சார்பில் மோதப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
வாய்ப்பு கேட்டு பலர் பல வழிகளிலும் காய் நகர்த்துகிறார்கள். அவர்களில் பிரபா ராமகிருஷ்ணன், பாபு, தாமரை பாரதி, ஆர்.எஸ்.பார்த்தசாரதி, பி.டி.செல்வகுமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகரான இந்த தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 22 பேர் வாக்காளர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண் வாக்காளர்களே அதிக அளவில் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் நாகர்கோவில் மாநகராட்சியும் அமைந்து உள்ளது.
1977 முதல் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கைப்பற்றி வந்த இந்த தொகுதியை முதல்முறையாக கடந்த தேர்தலில் பா.ஜனதா கைப்பற்றியது. எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மீண்டும் இந்த தொகுதியை கைப்பற்ற தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணியில் தி.மு.க.வுக்குதான் இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று உடன்பிறப்புகள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீண்டும் களம் இறக்கப்படுவார் என்று பரவலாக பேசப்படுகிறது. அதே நேரம் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் ஆகியோரும் சீட் கேட்டு காய் நகர்த்தி வருகிறார். மேயர் பதவி முடிவடைய இன்னும் காலம் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்க கட்சி தலைமை யோசிக்கும். கடைசியில் சுரேஷ்ராஜனா? ஹெலன் டேவிட்சனா? என்பது போல் தலைமை யோசிக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய இரு கட்சிகளுமே தங்களுக்குதான் இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறி வருகிறார்கள். யாருக்கு ஒதுக்கப்படுகிறதோ? அதன் பிறகே போட்டி கடுமையாகும். பா.ஜனதா வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் தக்க வைப்பதில் அந்த கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
குளச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் சற்று குறைவாக இருக்கும் ஒரே தொகுதி இந்த தொகுதி. மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 448 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 885. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 562 பேர்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குளச்சல் மீன்பிடி துறைமுகம் இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்கள். கடந்த 1971 முதல் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 3 கட்சிகளும் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றன. கடந்த 2011 முதல் 3 முறை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தன் கைவசம் வைத்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் மாவட்டமும் இந்த மாவட்டம்தான். குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த முறையும் குளச்சல் தொகுதியும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கப்படும் என்று கதர் சட்டைகாரர்கள் உறுதியாக கூறுகிறார்கள். இந்த தொகுதி எம்.எல்.ஏ.வான பிரின்ஸ் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஒருவேளை 3 முறை எம்.எல்.ஏ.வாக இருப்பதால் வேட்பாளர் வேண்டுமானால் மாறலாம். ஆனால் தொகுதி மாறப் போவதில்லை என்பது கதர் சட்டைகாரர்களின் வாதம்.
இந்த சூழலில் சைக்கிள் கேப்பில் தி.மு.க.வும் இந்த தொகுதியை இந்த முறை கைப்பற்ற முனைப்புடன் இருப்பதாக உடன்பிறப்புகளும் கூறி வருகிறார்கள். எனவே தொகுதி யாருக்கு? என்பது தெரிந்த பிறகு வேட்பாளர் தேர்வு களைகட்டும். அதே நேரம் அ.தி.மு.க. கூட்டணியிலும் இந்த தொகுதி அ.தி.மு.க.வுக்கா, பா.ஜனதாவுக்கா என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது.
பத்மநாபபுரம்
இந்த தொகுதியில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 56 வாக்காளர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ், மார்க்சிஸ்டு, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் மாறி மாறி கைப்பற்றி வந்துள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக பா.ஜனதா தடம் பதித்ததும் இந்த தொகுதியில்தான். 1996-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட வேலாயுதன் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தி.மு.க. கைவசம் இந்த தொகுதி இருந்து வருகிறது.
அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளுமே இந்த தொகுதிக்கு அமைச்சர் பிரதிநிதித்துவமும் வழங்கி இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் கு.லாரன்ஸ், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து இருக்கிறார்கள். தற்போது தி.மு.க.வை சேர்ந்த மனோதங்கராஜ் அமைச்சராக இருக்கிறார். அதே நேரம் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவும் இந்த தொகுதியை பெறுவதில் தீவிரமாக இருக்கிறது. எனவே 3 கட்சிகளிலும் வாய்ப்புக்காக பலர் காய் நகர்த்தி வருகிறார்கள்.
விளவங்கோடு
இந்த தொகுதியில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 219 வாக்காளர்கள் இருக்கிறார்கள். கடந்த 1971 முதல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கைவசமே இந்த தொகுதி இருந்து வருகிறது. 2011 முதல் 3 முறை இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2023-ல் அவர் காங்கிரசை விட்டு விலகியதால் 2024-ல் இந்த தொகுதி இடைதேர்தலை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பட் வெற்றி பெற்றார்.
மீண்டும் இந்த தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதே நேரம் ஏற்கனவே பல முறை வெற்றியை ருசித்த இந்த தொகுதியை இந்த முறை கைப்பற்ற கம்யூனிஸ்டு கட்சியும் தீவிரமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் சீட்டை கைப்பற்ற தற்போதைய எம்.எல்.ஏ. தாரகை கத்பட்டும், ரூபி மனோகரனும் இப்போதே மல்லு கட்ட தொடங்கி விட்டார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் மீண்டும் பா.ஜனதாவுக்கே இந்த தொகுதி வழங்கப்படும். விஜயதாரணியே களம் இறங்குவார் என்கிறார்கள் தாமரை சொந்தங்கள்.
கிள்ளியூர்
இந்த தொகுதியில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 837 வாக்காளர்கள் இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு பாடுபட்ட பொன்னப்ப நாடார், மார்ஷல் நேசமணி போன்றவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி என்ற சிறப்புக்குரியது. அதுமட்டுமல்ல தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இதுவரை இந்த தொகுதியை கைப்பற்றியது இல்லை.
1971 முதல் காங்கிரஸ், ஜனதா தளம், த.மா.கா. ஆகிய கட்சிகள்தான் தொடர்ந்து கைப்பற்றி வந்துள்ளன. 2006 முதல் தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. இதில் கடந்த 2 முறை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜேஷ்குமார் வெற்றி பெற்று வருகிறார். தற்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார்.
இந்த தொகுதியில் காங்கிரசுக்கு அடுத்ததாக பா.ஜனதாவுக்கும் கணிசமான செல்வாக்கு இருக்கிறது. எனவே தேசிய கட்சிகளான காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் நேரடி போட்டி உருவாகும் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது.
எது எப்படியாகினும் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பது தெரிந்த பிறகே மற்ற விவரங்கள் தெளிவாகும்.