சிறப்புக் கட்டுரைகள்
null

நாளை சந்திர கிரகணம்- வீட்டில் இருந்தபடி குலதெய்வ வழிபாடு, சிவபுராணம் பாடலாம்!

Published On 2026-03-02 16:04 IST   |   Update On 2026-03-02 16:36:00 IST
  • சூரிய கிரகணத்தை நேரடியாக வெறும் கண்களால் பார்க்க கூடாது.
  • ரிஷபம் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது.

கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, ஒரு விண்பொருளின் நிழல் மற்றொரு விண்பொருளின் மீது படர்ந்து தற்காலிகமாக மறைக்கப்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். சந்திரன் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணமாகும். பூமி நிலாவை மறைத்தால் அது சந்திர கிரகணமாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, சூரியனின் ஒளி பூமியை அடையாமல் சந்திரன் தடுக்கிறது. இது அமாவாசை நாளில் மட்டுமே நடக்கும். சந்திர கிரகணம் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது. இது பௌர்ணமியன்று சம்பவிக்கும்.

சூரிய கிரகணத்தை நேரடியாக வெறும் கண்களால் பார்க்க கூடாது. சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம். கடந்த அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் அது இந்தியாவில் தெரியவில்லை. தற்போது ஸ்ரீ மங்களகரமான விசுவாவசு வருடம் நாளை (செவ்வாய்க்கிழமை) பூரம் நட்சத்திரத்தில் நிகழும் சந்திர கிரகணம் கேது கிரகஸ்த சந்திர கிரகணமாக இந்தியாவில் சில இடங்களில் சந்திர உதயத்தில் தெரியும். கிரகண நேரம் மதியம் 3.19 முதல் மாலை 6.47மணி வரை. கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்கள் மகம், பூரம், உத்திரம், பூராடம், பரணி. கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவைகள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு பிறகு உணவு உண்ணக் கூடாது. கிரகண நேரத்தில் சமையல் செய்யவோ, சாப்பிடவோ கூடாது.

கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பவுர்ணமி திதி சிரார்தம் மறுநாள் புதன்கிழமை செய்யவேண்டும். உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம். அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகரை வழிபட்டு சிகிச்சை செய்யலாம்.

கிரகண காலங்களில் செய்யக் கூடியவை கிரகணம் ஏற்படும் பவுர்ணமி நாளில் ஆன்மகாரகன் சூரியன் மற்றும் மனோகாரகன் சந்திரன் இருவரும் மிகவும் அதீத சக்தி நிலையில் இருப்பார்கள். சந்திரன், ராகு, சூரியன் கேது இவைகள் இரண்டுமே நல்ல இணைவுகள் இல்லை. அதனால் தான் உடலையும் உள்ளத்தினையும் அன்று ரிலாக்சாக வேறு எந்த வேலையும் இல்லாமல் உடலின் செயற்கை இயக்கத்தினை நிறுத்தி வைக்கிறோம். (ஜீரணம் முதல் கடும் வேலைகள் வரை)மனதின் ஆற்றலும் ஆன்மாவின் ஆற்றலும் வெளிப்படும் இந்த நொடிகளை அனைவரும் ஆன்ம சுத்திக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனதின் சக்திகள் ராகுவினால் பாதிக்கப்படும் படி உள்ளதால் வீட்டிலிருந்து மானசீகமாக குலதெய்வ, உபாசனை தெய்வ வழிபாடு நடத்தலாம்.

ராகு கேதுக்களின் பாதையில் பூமி, சூரியன், சந்திரன் நேர்கோட்டில் வரும், அந்த நொடிகள் அமானுஷ்யமான விசயங்களை உண்டாக்கும். அந்த நேரத்தில் நாம் இறைவனை சரணடைந்து விட்டால் இறைவனின் அரிய சக்திகள் நம்முள்ளும் நிறைந்து பலவிதமான நன்மைகள் உண்டாகும். கிரகண காலங்களில் செய்யப்படும் வழிபாடுகள் பல மடங்கு புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும். சுய ஜாதகத்தில் உள்ள கிரகண தோஷம் வீரியம் குறையும்.

கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்யலாம் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும். காயத்திரி மந்திரம் மற்றும் ராம நாம பாராயனம் செய்யலாம். கிரகண தோஷமுள்ள பரிகார நட்சத்திரங்களான மகம், பூரம், உத்திரம், பூராடம், பரணியில் பிறந்தவர்கள் கிரகணம் முடிந்த பிறகு கல் உப்பு அல்லது மஞ்சள் கலந்த நீரில் குளித்து முடித்து அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து 1 கிலோ பச்சரியை தானம் தர வேண்டும்.

பிறகு புதியதாக சமைத்த உணவை சாப்பிட வேண்டும். இனி 12 ராசியினருக்கும் கிரகணம் பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

 

மேஷம் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. ஆழ்மன எண்ணங்களை கட்டுப்படுத்தும் தியானம் யோகா மூச்சுப் பயிற்சி மனநிறைவு மன நிம்மதியை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும். மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கிரகணம் முடிந்த பிறகு அருகில் உள்ள சிவன் கோவிலில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது.

ரிஷபம் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. தாய் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் மோதல் கருத்து வேறுபாடு வரலாம். தாய் தந்தையரை அனுசரித்துச் செல்ல வேண்டும். சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். முதல் முறையாக நோய்க்கு வைத்தியம் செய்வது நல்லதல்ல. தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் சுய ஜாதகரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.

மிதுன ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் மனப்போராட்டம் அதிகரிக்கும் ஞாபக சக்தி குறையும். வீடு மாற்றுவது, வேலை மாற்றுவது தொழில் நிறுவனத்தை மாற்றுவது, உத்தியோக மாற்றம், பத்திரப்பதிவு பாகப்பிரிவினை ஆகியவற்றை தவிர்தல் நல்லது. முக்கிய ஆபரணம் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். கிரகண நாளில் வெளியூர் பயணங்களை தவிர்த்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.

கடக ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உணவு ஒவ்வாமை. அலர்ஜி, கண் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். காரசாரமான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். யாரையும் சபிக்க கூடாது. யாரிடமும் சாபம் வாங்க கூடாது. அடிப்படை வசதிகள் அற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும்.

சிம்ம ராசியில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. விரயாதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத கடுமையான உடல் பாதிப்பு உள்ளவர்கள் அன்று வைத்தியம் செய்யலாம். சுய வைத்தியம். சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது நல்லது. மன வளர்ச்சியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.

கன்னி ராசிக்கு 12-ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் லாப ஸ்தான அதிபதி சந்திரனுடன் கேது இணைந்து சந்திர கிரகண தோஷம் ஏற்படுகிறது. தூக்கம் சற்று குறைவுபடும். மனசஞ்சலம் பய உணர்வும் இருக்கும். உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம். அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் குல இஷ்ட தெய்வத்தை வழிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். கண் அறுவை சிகிச்சை செய்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும்.

துலாம் ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. தொழில் ஸ்தான அதிபதி சந்திரன் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் கிரகணம் அடைகிறார். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும். அன்று போரிங் போடுதல் கிணறு வெட்டுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாயையும் தாய்வயதில் உள்ளவர்களை மதிப்பதும் ஆசீர்வாதம் பெறுவதும் இன்னல்களை நீக்கும்.

விருச்சிக ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் கேது சேர்க்கை ஏற்படுகிறது. அன்று உங்களின் ஒன்பதாம் அதிபதி சந்திரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும். புதிய வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும்.

தனுசு ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. செய்த தர்மம் தலை காக்கும். சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். தந்தையின் ஆரோக்கியத்தில் விழிப்பு தேவை. தந்தை அல்லது ஆன்மீக குருமார்களிடம் நல்லாசி பெறுவது நல்லது.

மகரம் ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் கேது சேர்க்கையுடன் கிரகணம் சம்பவிக்கிறது. வழக்குகள், அறுவை சிகிச்சை, வெளியூர் வெளிநாட்டுப் பயணம் கொடுக்கல் வாங்கல், வீண் வாக்குவாதங்கள் சண்டை சச்சரவு, தற்பெருமை சுய கவுரவம் எதிர்பார்ப்பது, ஆகியவற்றை தவிர்ப்பதால் இன்னல்கள் குறையும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் தேவை அறிந்து உதவி செய்வதால் உங்களின் தேவைகள் நிறைவேறும்.

கும்பம் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், திருமணம், திருமண ஒப்பந்தம், விவாகரத்து வழக்குகளை விசாரித்தல், வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் இவைகளை சில நாட்களுக்கு தவிர்க்கவும். வாழ்க்கை துணை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை பகைக்க கூடாது. நலிந்தவர்களின் வாழ்வாதாரம் உயரத் தேவையான உதவிகளை செய்வது நல்லது.

மீன ராசிக்கு 6-ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இன்றைய நாளில் கடன் தீர்ப்பதால் நிரந்தரமாக கடன் தொல்லை குறையும். எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஸ்ரீ ருத்ரம் படிப்பதால் கேட்பதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பய உணர்வு அகலும்.

கிரகணம் வானியல் நிலவு என்றாலும் சந்திர கிரகணம் மன ரீதியான உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நோய்த் தாக்கம் உள்ளவர்கள் பலவீனமான மனமுள்ளவர்கள் சிவபுராணம் படிப்பது நல்லது.

செல்: 98652 20406

Tags:    

Similar News