புதுச்சேரி

பைக் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு பதிலாக தந்தை கைது

Published On 2025-04-08 11:03 IST   |   Update On 2025-04-08 11:03:00 IST
  • விபத்து குறித்து சபாபதி மனைவி ஆனந்தி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கீழ்ப்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சபாபதி (வயது45). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 5-ந் தேதி தனது பைக்கில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் ஓட்டி வந்த பைக் சபாபதி பைக் மீது மோதியது. இதில் சபாபதிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

விபத்து குறித்து சபாபதி மனைவி ஆனந்தி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.

இதில் பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கீழ்ப்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது. எனவே புதிய மோட்டார் வாகன தடைச் சட்டத்தின் படி சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை கூலித் தொழிலாளி விஜயகாந்த் (43) என்பவரை குற்றவாளியாக சேர்த்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர். சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது எனவும் 12 மாதங்களுக்கு பைக்கின் பதிவு சான்றிதழை இடை நீக்கம் செய்யவும் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

Tags:    

Similar News