இந்தியா

காஷ்மீரில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை: தனியாக நின்று சண்டையிட்ட வனத்துறை அதிகாரி- வைரலாகும் வீடியோ

Published On 2024-04-04 05:17 GMT   |   Update On 2024-04-04 06:17 GMT
  • சிறுத்தையை பிடிக்க முயன்றபோது கையில் இருந்து தடி நழுவி கீழே விழுந்தது.
  • தடியை எடுக்க முயற்சித்தபோது சிறுத்தை ஆக்ரோசத்துடன் தாக்கியது.

மத்திய காஷ்மீர் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று திடீரென காட்டுப் பகுதியில் இருந்து ஊருக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது. இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரை கிராம மக்கள் அழைத்தனர்.

வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததும், அவர்களுடன் கிராம மக்களும் இணைந்து சிறுத்தையை உயிருடன் பிடிக்க முடிவு செய்தனர்.

கம்பு தடியுடன் சிறுத்தையை விரட்டினர். சிறுத்தை ஒவ்வொரு வீடாக தாண்டி தப்பிக்க முயற்சித்தது. இறுதியாக ஒரு தெருவில் சிக்கிக்கொண்டது. அப்போது வன அதிகாரி ஒருவர் கிராம மக்கள் சிலருடன் தடியுடன் சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தார்.

சிறுத்தை தப்பிக்கும் முயற்சியில் சீறிக் கொண்டே இருந்தது. அப்போது அதிகாரி கையில் இருந்து தடி கீழே விழுந்தது. சிறுத்தையிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு தடியை எடுக்க முயன்றார்.

அப்போது சிறுத்தை அவர் மீது ஆக்ரோசத்துடன் பாய்ந்தது. அதிகாரி சிறுத்தையின் கழுத்தை ஒரு கையில் பிடித்த நிலையில், எதிர்பாராத விதமாக மற்றொரு கை சிறுத்தையின் வாயில் மாட்டிக் கொண்டது. இதனால் சிறுத்தை வாயில் இருந்து கையை எடுக்க முடியாமல் திணறினார்.

அப்போது அருகில் நின்றிருந்த மற்றொரு அதிகாரி தடியால் சிறுத்தையை தாக்கினார். அந்த நேரத்தில் சிறுத்தையின் வாயில் இருந்து கையை எடுத்துக் கொண்ட அதிகாரி சிறுத்தையை கீழே சாய்த்தார். உடனடியாக ஊர் பொதுமக்கள் சிறுத்தையை பயங்கரமாக தாக்கினர்.

பின்னர், சிறுத்தையை வனத்துறையினர் அதிகாரிகள் பிடித்துச் சென்றனர். சிறுத்தையுடன் தனி நபராக நின்று சண்டையிட்ட வனத்துறை அதிகாரியை கிராம மக்கள் பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News