துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு
- முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
- மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின.
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம், தெலுங்கானாவில் முன்னாள் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய காட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் விரைவில் தெரிந்து விடும். சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.