'வசந்த பஞ்சமி' தினத்தையொட்டி திரிவேணி சங்கமத்தில் 1 கோடி பக்தர்கள் புனித நீராடல்
- பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கின்றன.
- தை அமாவாசைக்குப்பிறகு வரும் ‘வசந்த பஞ்சமி’ நாளில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா மேளா நடைபெற்று வருகிறது. நேற்று 'வசந்த பஞ்சமி' தினத்தையொட்டி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கின்றன. இந்த சங்கமம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் கும்பமேளா போன்ற புனித யாத்திரைகளின் மையமாகும் திகழ்கிறது.
இங்கு ஆண்டுக்கொருமுறை நிகழும் 'மகாமேளா' கடந்த 3-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. அங்கு இதுவரை லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று 'வசந்த பஞ்சமி'யையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பிரயாக்ராஜுக்கு பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
தை அமாவாசைக்குப்பிறகு வரும் 'வசந்த பஞ்சமி' நாளில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதன்படி நேற்று லட்சக்கணக்காணோர் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். காலை 8 மணி வரையில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரயாக்ராஜ் மேளா ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை சுமார் 1.04 கோடி பேர் புனித நீராடினர்'' என்றார்.
பிரயாக்ராஜில் மட்டுமல்லாது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், ராமர் ஜென்ம பூமியான அயோத்தியிலும் திரளான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.