இந்தியா

'வந்தே பாரத்' பயன்பெற பிற ரெயில்கள் பலி கடா! - குமுறும் பயணிகள்

Published On 2023-09-30 09:09 GMT   |   Update On 2023-09-30 09:43 GMT
  • செப்டம்பர் 9 முதல் சென்னை-திருநெல்வேலி மார்க்கத்தில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது
  • வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி 50 நிமிடங்களாக உள்ளது

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்திய ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை. பகல் நேர ரெயில் சேவையான இதன் மூலம் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் பயணிகள் நாட்டின் ஒரு நகரிலிருந்து மற்றொரு முக்கிய நகரத்தை அடைய முடியும். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த சேவை தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை-மைசூரு மற்றும் சென்னை-கோயம்புத்தூர் ஆகிய மார்க்கங்களுக்கிடையே முன்னரே இந்த சேவை அறிமுகமான நிலையில் செப்டம்பர் 9 முதல் சென்னை-திருநெல்வேலி மார்க்கத்தில் 'வந்தே பாரத்' ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இதன் காரணமாக ஏற்கெனவே இந்த மார்க்கத்தில் இயங்கி வந்த பிற ரெயில்களின் பயண நேரம் அதிகமாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் ரெயில்களின் புதிய பயண நேரப்படி மதுரை-சென்னை மார்க்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் அதிகமாகவும், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் பயண நேரம் 10லிருந்து 15 நிமிடங்கள் வரையும் அதிகரிக்கப்படுகிறது.

'வந்தே பாரத்' ரெயிலின் பயண நேரம் (சென்னை-மதுரை) 5 மணி 50 நிமிடங்களாகவும், பிற அதி விரைவு (Super Fast) ரெயில்களின் பயண நேரம் 7 மணி 45 நிமிடங்கள் எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்பு, சதாப்தி ரெயில்களில் பயணிப்பதை ஊக்குவிக்க அதே தடத்தில் பிற ரெயில்களின் பயண நேரங்களை அதிகரிக்க செய்த முயற்சியை போலவே பயணிகளால் இது பார்க்கப்படுகிறது.

பெரும் பொருட்செலவில் ரெயில் பாதைகளை மேம்படுத்தி விட்டு அதன் பயன் மற்ற அதி விரைவு ரெயில் பயண கட்டணங்களை விட 15 சதவீதம் அதிகமுள்ள ரெயில்களுக்கு மட்டுமே பலனளிக்கும் வகையில் மாற்றியமைத்திருப்பது ஒரு வகையில் மக்களின் பணத்தை வீணடிப்பதாகும் என ரெயில் பயணிகள் விமர்சிக்கின்றனர்.

Tags:    

Similar News