பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மாநிலங்கள்: தமிழ்நாட்டுக்கு இந்த இடம்
- பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன.
- விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
புதுடெல்லி:
ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள்.
பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
ஆனாலும், பணியிடங்களில் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஒன்று. பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம்.
இந்நிலையில், இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியாகியது. ஆந்திர பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2ம் இடத்திலும் மற்றும் குஜராத் 3ம் இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 4ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஓர் அளவீடு என்ற அளவில் இல்லாமல் கல்வி, வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிபலிப்பாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பான சூழல், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஆகியவை அந்த இடங்களை நோக்கி பெண்கள் படையெடுக்க வழிவகுக்கிறது என தெரிவிக்கின்றது.