இந்தியாவை நோக்கி விரல் நீட்டுபவர்கள் ரஷியாவிடம் வியாபாரம் செய்கிறார்கள் - டிரம்புக்கு இந்தியா பதில்
- ரஷிய தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து இந்தியாவுக்கு கவலை இல்லை.
- இந்தியாவின் வழக்கமான எண்ணெய் சப்ளையர்கள் தங்கள் விநியோகங்களை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட்டனர்.
"இந்தியா ரஷியாவிடம் இருந்து ரஷியா பணத்திற்கு அதிக அளவில் கச்சாய் எண்ணெய் மட்டும் வாங்கவில்லை. அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.
ரஷிய தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி இந்தியாவுக்கு கவலை இல்லை. இதன் காரணமாக நான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கணிசமான அளவில் உயர்த்த இருக்கிறேன் .
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு வரிகளை மேலும் அதிகரிக்க போகிறேன்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசுகையில், இந்தியாவின் எரிசக்தி கொள்கை அதன் தேசிய நலன் மற்றும் உலக சந்தையின் நிர்ப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது அவசியமான நடவடிக்கை.
உக்ரைன் போர் தொடங்கியபோது, இந்தியாவின் வழக்கமான எண்ணெய் சப்ளையர்கள் தங்கள் விநியோகங்களை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட்டனர்.
அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவுக்கு குறைந்த வாய்ப்புகள் இருந்தன. எனவே ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது லாபம் ஈட்டும் உத்தி அல்ல, மாறாக பொதுவான இந்திய நுகர்வோருக்கு மலிவான மற்றும் தடையற்ற விநியோகத்தை வழங்குவதற்கான முன்னுரிமையாகும்.
இந்தியாவை விமர்சிக்கும் நாடுகள் தாங்களே ரஷியாவிடம் வணிகம் செய்கின்றன. அவர்களுக்கு அப்படி செய்வது கட்டாயம் அல்ல. ஆனால் அவர்கள் லாபத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள் என்பதுதான் ஒரே வித்தியாசம். மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன், அவர்கள் தங்கள் சொந்த நடத்தையைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.