இந்தியா

ஐதராபாத்தில் கல்லூரி விடுதியில் மாணவனை கடுமையாக தாக்கிய சீனியர் மாணவர்கள்- 5 பேர் கைது

Published On 2022-11-14 09:33 GMT   |   Update On 2022-11-14 09:33 GMT
  • மாணவனை தாக்கும் வீடியோக்களை அங்கிருந்த மற்றொரு மாணவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
  • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சங்கர் பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்தக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களுக்கும் ஜூனியர் மாணவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

கடந்த வாரம் கல்லூரி விடுதிக்குள் புகுந்த 10 சீனியர் மாணவர்கள் விடுதி அறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்த ஒரு மாணவரிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதனைகளை கூற சொன்னார்கள். அவர் மறுத்தார்.

இதனால் அவரை தாக்கினர். அடி தாங்காமல் துடித்த அவர் அந்த மதத்தின் போதனைகளை கூறினார். இருந்தாலும் சீனியர் மாணவர்கள் அந்த மாணவனை கடுமையாக அடித்து உதைத்தனர்.

கீழே தள்ளி அவர் மீது வாலிபர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு கை கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

அவருடன் வந்த மாணவர்கள் மாணவனை காலால் சரமாரியாக எட்டி உதைத்தும், முகத்தில் கைகளால் தாக்கியும் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் மாணவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணி பர்சை எடுத்துக் கொண்டு சென்றனர். மாணவனை தாக்கும் வீடியோக்களை அங்கிருந்த மற்றொரு மாணவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சங்கர் பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தாக்கிய 5 சீனியர் மாணவர்களை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News