திருப்பதி கோவில் அருகே கோவா பக்தர்களிடம் ரூ.1 லட்சம், 5 செல்போன்கள் திருட்டு
- திருப்பதி தேவஸ்தான விடுதி அறைகளை வாடகைக்கு எடுக்கும் பக்தர்களுக்கு வழக்கமாக 2 சாவிகள் வழங்குவது வழக்கம்.
- கோவா பக்தர்களுக்கு ஒரு சாவி மட்டுமே விடுதி ஊழியர்கள் வழங்கி உள்ளனர்.
திருப்பதி:
கோவாவை சேர்ந்த 15 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்தனர்.
அவர்கள் கருடாத்ரி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதியில் 2 அறைகளை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் காலை தரிசனத்திற்கு சென்றனர்.
அந்த நேரத்தில் மர்மநபர்கள் அறையின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம், 5 செல்போன்களை திருடி சென்று விட்டனர். தரிசனம் முடிந்து வந்த பக்தர்கள் அறையில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அறைக்குள் சென்று பார்த்த போது அவர்களது உடமைகள் அனைத்தும் சிதறி கிடந்தது.
திருப்பதி தேவஸ்தான விடுதி அறைகளை வாடகைக்கு எடுக்கும் பக்தர்களுக்கு வழக்கமாக 2 சாவிகள் வழங்குவது வழக்கம்.
ஆனால் கோவா பக்தர்களுக்கு ஒரு சாவி மட்டுமே விடுதி ஊழியர்கள் வழங்கி உள்ளனர். இதனால் விடுதி ஊழியர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது.
இது குறித்து பக்தர்கள் திருமலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.