இந்தியா

மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2023-02-01 23:15 GMT   |   Update On 2023-02-01 23:16 GMT
  • நண்பர்கள் கால பட்ஜெட்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமில்லை.
  • இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

புதுடெல்லி:

மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த நாட்களை மத்திய அரசு அமிர்த காலம் என அழைத்து வருகிறது. அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த முதல் பட்ஜெட் நாட்டை வளர்ந்த நாடாக்குவதற்கு அடித்தளமிட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

ஆனால் மத்திய அரசு தனது கார்பரேட் நண்பர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதாக குற்றம் சாட்டி இந்த காலத்தை 'நண்பர்கள் காலம்' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அந்தவகையில் இந்த பட்ஜெட்டை 'நண்பர்கள் கால பட்ஜெட்' என அவர் குறைகூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

நண்பர்கள் கால பட்ஜெட்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த திட்டமில்லை. சமத்துவமின்மையைத் தடுக்கும் நோக்கம் இல்லை.

1 சதவீத பணக்காரர்களுக்கு 40 சதவீத செல்வம் உள்ளது. 50 சதவீத ஏழைகள் ஊதியத்தின் 64 சதவீதத்தை ஜி.எஸ்.டி.யாக செலுத்துகிறார்கள். 42 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

இருந்தாலும் பிரதமர் மோடிக்கு கவலை இல்லை.

இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை இந்த பட்ஜெட் நிரூபிக்கிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Tags:    

Similar News