வெடிகுண்டு மிரட்டலால் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தபோலிம் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
மாஸ்கோவில் இருந்து 244 பயணிகளுடன் அஸூர் ஏர் விமானம் கோவா சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், கோவா ஏர் டிராபிக் கன்ட்ரோலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, குஜராத் ஜாம்நகர் விமான நிலையத்தில் இரவு 9.49 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ராஜ்கோட் மற்றும் ஜாம்நகர் ரேஞ்ச்) அசோக் குமார் யாதவ் கூறியதாவது:-
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து 236 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உள்ளூர் அதிகாரிகள், போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கப் படையுடன் இணைந்து விமானத்தை சோதனை செய்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்தும் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானம் டபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளதாக கோவா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தபோலிம் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது.