இந்தியா

தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை கொலை செய்து தக்காளி கொள்ளை

Published On 2023-07-18 03:58 GMT   |   Update On 2023-07-18 03:58 GMT
  • தற்போது தக்காளியின் விலை உச்சத்தை எட்டி உள்ளது.
  • நீண்ட நேரம் ஆகியும் மதுகர் ரெட்டி வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் தக்காளி தோட்டத்திற்கு வந்து பார்த்தனர்.

திருப்பதி:

தக்காளி விலை கிலோ ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் தக்காளி தட்டுப்பாடு காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி மதிப்பு எங்கேயோ சென்று விட்டது.

ஆந்திராவில் கடந்த வாரம் தக்காளி விற்பனை செய்து விட்டு பணத்துடன் வீடு திரும்பிய விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் மற்றொரு விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பெட்ட திப்பா சமுத்திரத்தை சேர்ந்தவர் மதுகர் ரெட்டி. விவசாயி.

இவருக்கு ஊருக்கு வெளியே விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு உள்ளார்.

தற்போது தக்காளியின் விலை உச்சத்தை எட்டி உள்ளதால் கொள்ளையர்கள் தக்காளியை பறித்து சென்று விடுவார்கள் என எண்ணி தினமும் தக்காளி தோட்டத்திற்கு பாதுகாப்பாக காவல் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மதுகர் ரெட்டி தக்காளி தோட்டத்திற்கு காவலுக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தக்காளிகளை பறித்தனர்.

இதனைக் கண்ட மதுகர் ரெட்டி தக்காளி பறிக்கும் நபர்களை விரட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மதுகர் ரெட்டியின் கழுத்தை நெரித்தனர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து தோட்டத்தில் இருந்து தக்காளிகளை கும்பல் பறித்து சென்றனர்.

நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மதுகர் ரெட்டி வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் தக்காளி தோட்டத்திற்கு வந்து பார்த்தனர்.

அப்போது மதுகர் ரெட்டி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதுகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News