மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்க விட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் 3 பேர் கைது
- பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் மீது கருப்பு பலன்களை பறக்க விட்டதாக காங்கிரஸ் பிரமுகர்கள் பத்மஸ்ரீ, சாவித்திரி, கிஷோர், ரவிகாந்த், ராஜசேகர் ஆகியோரை பிடித்துச் சென்று பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- இதையடுத்து கிஷோர், ரவிகாந்த், ராஜசேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பீமவாரத்தில் சுதந்திர போராட்ட தியாகி அல்லூரி சீதாராம ராஜியின் 30 அடி உயர வெண்கலை சிலையை திறந்து வைப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பீமாவரம் புறப்பட்டு சென்றார். ஹெலிகாப்டர் கேசரபள்ளி என்ற இடத்தில் சென்ற போது அங்குள்ள மேம்பாலத்தில் நின்றிருந்த காங்கிரசார் ஹெலிகாப்டரை நோக்கி கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். பலூன்கள் ஹெலிகாப்டர் மீது மோதியவாறு சென்றது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் மீது கருப்பு பலன்களை பறக்க விட்டதாக காங்கிரஸ் பிரமுகர்கள் பத்மஸ்ரீ, சாவித்திரி, கிஷோர், ரவிகாந்த், ராஜசேகர் ஆகியோரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கிஷோர், ரவிகாந்த், ராஜசேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கூறி மோடி மோசடி செய்ததால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலன்களை பறக்க விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.