இந்தியா

மும்பையில் 17 வயது சிறுவனை கொன்று உடலை 4 துண்டாக வெட்டிய ஆட்டோ டிரைவர்

Published On 2023-08-31 10:18 GMT   |   Update On 2023-08-31 11:15 GMT
  • ஆத்திரம் அடைந்த ஷபி சையக் சம்பவத்தன்று இஸ்லார் மார்வாடியை அரிவாளால் வெட்டினார்.
  • கொலையுண்ட சிறுவன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு புகுந்து திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷபி சையக் (வயது33) ஆட்டோ டிரைவர். இவரது மனைவியை இஸ்லார் மார்வாடி என்ற 17 வயது சிறுவன் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த ஷபி சையக் அந்த சிறுவனை கண்டித்தார். ஆனாலும் அவன் கேட்கவில்லை. தொடர்ந்து கிண்டல் செய்து வந்தான்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷபி சையக் சம்பவத்தன்று இஸ்லார் மார்வாடியை அரிவாளால் வெட்டினார். தலையில் சுத்தியலால் தாக்கினார். இதில் அவன் இறந்தான். இதையடுத்து தடயத்தை அழிப்பதற்காக சிறுவன் உடலை ஷபி சையக் 4 துண்டுகளாக வெட்டி பெரிய பைகளில் அடைத்தார். பின்னர் உடல் பாகங்கள் அடங்கிய பைகளை வீட்டு சமையல் அறையில் மறைத்து வைத்தார்.

இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஷபி சையக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையுண்ட சிறுவன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு புகுந்து திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டான். பின்னர் சிறுவர் சீர்திருத்த மையத்தில் இருந்த அவன் போதை பொருளுக்கு அடிமையானதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News