ஆண் குழந்தை இல்லாததால் மகளை அடித்துக் கொன்ற தந்தை- ஜாமீன் எடுக்க வந்த உறவினர் வெட்டிக்கொலை
- கோபி தனது 2 வயது பெண் குழந்தையின் காலை பிடித்து சுவற்றில் அடித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், மங்களகிரியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆண் குழந்தை வேண்டும் என விரும்பிய கோபிக்கு அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி தனது 2 வயது பெண் குழந்தையின் காலை பிடித்து சுவற்றில் அடித்தார். இதில் பெண் குழந்தை படுகாயம் அடைந்தது.
இதனைக் கண்ட அவரது மனைவி மவுனிகா குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக விஜயவாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை ஜெயிலில் அடைத்தனர்.
தண்டனை பெற்று வரும் கோபியை ஜாமினில் எடுக்க அவரது உறவினர் சாய் சந்தீப் முயற்சி செய்து வந்தார். இதனை அறிந்த கோபியின் மாமனார் சத்திய நாராயணா மற்றும் அவரது மகன் வெங்கட கிருஷ்ணா ஆகியோர் கோபியை ஜாமீனில் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாய் சந்தீப், சத்திய நாராயணாவை கல்லால் தாக்கினார். இதில் சத்திய நாராயணா படுகாயம் அடைந்தார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவரது மகன் வெங்கட கிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாய் சந்தீப்பை ஓட ஓட விரட்டிச் சென்று கழுத்தை அறுத்தார்.
இதில் சாய் சந்தீப் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து வெங்கட கிருஷ்ணா மங்களகிரி போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.