இந்தியா

கலவரம்-துப்பாக்கி சூட்டால் பதற்றம்: மணிப்பூரில் அமித் ஷா ஆலோசனை

Published On 2023-05-30 07:34 GMT   |   Update On 2023-05-30 07:34 GMT
  • வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முடிவு செய்தார்.
  • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இம்பாலுக்கு சென்றடைந்தார்.

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு நாகா, குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதில் 74 பேர் பலியானார்கள். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த 27-ந்தேதி முதல் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முடிவு செய்தார். அதன்படி அவர் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இம்பாலுக்கு நேற்று இரவு சென்றடைந்தார்.

இன்று அமித் ஷா, மாநில முதல்-மந்திரி பிரேன்சிங், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலை கேட்டறிந்த அமித் ஷா, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

மேலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமித் ஷா, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ஆலோசனையில் ஈடு பட்டனர்.

வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அமித் ஷா நாளை செய்தியாளர் சந்திப்பில் கூற உள்ளார். பின்னர் நாளை மறுநாள் டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News