பூஞ்ச் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 9 பேர் பலி
- ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்தார்.
- ராணுவம், போலீசார் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 9 பேர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர்.
36-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பூஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சாவ்ஜியன் எல்லைப் பகுதியில் உள்ள பிராரி நல்லா அருகே விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, ராணுவம், போலீசார் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோஜ் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பூஞ்ச், சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க காவல்துறை மற்றும் குடிமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.