இந்தியா

உத்தரபிரதேசத்தில் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

Published On 2023-10-15 00:00 GMT   |   Update On 2023-10-15 00:00 GMT
  • தங்கத்தை கடத்திச் செல்வதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவில் இருந்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • தங்க பிஸ்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் படோகி மாவட்டத்தில் கடத்தல்காரர்கள் சிலர் பெருமளவிலான தங்கத்தை கடத்திச் செல்வதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவில் இருந்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாருடன், வருவாய் நுண்ணறிவுப் பிரிவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதையடுத்து உஷாரான கடத்தல்காரர்கள், ராஜ்புரா என்ற இடத்தில் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர். மோரா நதியையொட்டிய காட்டுக்குள் அவர்கள் புகுந்து விட்டனர்.

இந்த நிலையில் கடத்தல்காரர்களின் வாகனத்தில் இருந்து ரூ.8.45 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்க பிஸ்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். காட்டுக்குள் புகுந்த கடத்தல்காரர்களில் 2 பேரை போலீஸ், வருவாய் நுண்ணறிவுப் பிரிவு கூட்டுப் படையினர் நேற்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் இருவரும் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வங்காளதேசத்தில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு தங்கத்தை கடத்திச் செல்லும்போது பிடிபட்டுள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மராட்டிய மாநிலம் நாக்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு ரெயிலில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கசிந்தது. அதையடுத்து நேற்று அங்கு சோதனை மேற்கொண்ட ரெயில்வே பாதுகாப்பு படையினரும், வருவாய் நுண்ணறிவுப் பிரிவினரும் 2 பேரை மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்த சுமார் 9 கிலோ தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றினர்.

அதன் மதிப்பு ரூ.5 கோடியே 40 லட்சம் என போலீசார் கூறினர்.

Tags:    

Similar News