நாட்டை விட்டு வெளியேறலாம்... மெட்டா, வாட்சப் நிறுவனங்களுக்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை
- நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் குற்றம் சாட்டியது.
- மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை, பேஸ்புக்கிடம் கொடுத்து சமூக வலைதள சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியது.
இதனால் மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த நியாயமற்ற நடைமுறையை உடனடியாக மெட்டா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், "நுகர்வோர் தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் நுகர்வோரின் தனியுரிமையுடன் நீங்கள் எப்படி விளையாட முடியும்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும். எங்கள் நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது எங்கள் தரவின் ஒரு இலக்கத்தை கூட நீங்கள் பகிர்ந்து கொள்ள நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் மேலும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் உங்கள் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.