இந்தியா

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

Published On 2025-06-19 13:15 IST   |   Update On 2025-06-19 13:15:00 IST
  • ஏடிஜிபி ஜெயராம் தொடர்ந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
  • சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேறு அமர்வு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த சூழ்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து ஏ.டி.ஜி.பி. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை என்றும், ஏடிஜிபி ஜெயராம் தொடர்ந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

சில உத்தரவுகளை பிறப்பித்து இவ்வாறுதான் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் கட்டாயப்படுத்துவதுபோல உள்ளது. எந்தெந்த வழக்குகள் என்பதைக்கூற விரும்பவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீதான சிறுவன் கடத்தல் வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்தது. சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேறு அமர்வு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

ஏடிஜிபி ஜெயராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதிகள் உஜ்வால் பூயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு ரத்து செய்தது.

Tags:    

Similar News