இந்தியா

விடுப்பு எடுத்து போராட்டம்: விமான ஊழியர்கள் 30 பேர் பணி நீக்கம், ஏர் இந்தியா நடவடிக்கை

Published On 2024-05-09 05:58 GMT   |   Update On 2024-05-09 05:58 GMT
  • 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி.
  • 30 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசுக்கு சொந்த மாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த 2022-ம் ஆண்டு வாங்கியது.

இதற்கிடையே ஊதியம், போனசில் பாகுபாடு காட்டு வதாகவும், புதிய வேலை வாய்ப்பு விதிமுறைகளை எதிர்த்தும் ஏர் இந்தியா ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் திடீரென்று உடல் நலக்குறைவு விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

ஊழியர்கள் இன்று 2-வது நாளாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஊழியர்கள் 30 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அவர்களுக்கு அனுப்பப் பட்ட பணிநீக்க கடிதத்தில், அதிகளவில் விடுப்பு எடுத்தது எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் ஒருங்கிணைக்கப்பட்ட வேலையில் இருந்து விலகியிருப்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் கூறி விடுமுறை எடுத்துள்ள மீதமுள்ள ஊழியர்கள் இன்று மாலை 4 மணிக்குள் பணியில் சேர வேண்டும். இல்லையென்றால் பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே கேபின் குழு உறுப்பினர்களுடன் ஏர் இந்தியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News