இந்தியா

சபரிமலையில் உண்டியல் காணிக்கை நாணயங்களை எண்ணி முடிக்க மேலும் 10 நாட்கள் ஆகும்- தேவசம்போர்டு

Published On 2023-01-24 10:56 IST   |   Update On 2023-01-24 10:56:00 IST
  • சபரிமலை கோவிலில் உண்டியல் காணிக்கை நாணயங்களை எண்ண நவீன வசதிகள் எதுவும் இல்லை.
  • கோவில் நிர்வாகம் 479 பணியாளர்களை புதிதாக நியமனம் செய்தது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

மண்டல பூஜை தொடங்கிய முதல் நாள் முதல் விழா முடியும் இறுதி நாள் வரை தினமும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பக்தர்கள் வந்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவில் வருவாயும் அதிகரித்தது. உண்டியல் காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை மூலம் சுமார் ரூ.330 கோடிக்கு வருவாய் கிடைத்தது.

இதில் உண்டியலில் போடப்பட்ட நாணயங்கள் மதிப்பு மட்டும் சேர்க்கப்படவில்லை. அவை முழுமையாக எண்ணப்பட்ட பிறகு கோவில் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

கோவிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ண தற்போதுள்ள ஊழியர்களால் முடியாது என தெரிவிக்கப்பட்டதால் கூடுதல் ஊழியர்களை நியமித்து கொள்ள கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து கோவில் நிர்வாகம் 479 பணியாளர்களை புதிதாக நியமனம் செய்தது.

இவர்களையும் சேர்த்து இப்போது 700 ஊழியர்கள் உண்டியல் நாணயங்களை எண்ணி வருகிறார்கள். இதுபற்றி கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-

சபரிமலை கோவிலில் உண்டியல் காணிக்கை நாணயங்களை எண்ண நவீன வசதிகள் எதுவும் இல்லை. தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படவில்லை. இதனால் உண்டியல் நாணயங்கள் எண்ணுவது தாமதமாகி வருகிறது.

இப்போது காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சோர்வடைந்து உள்ளனர். எனவே புதிய ஊழியர்களை எண்ணும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தற்போதுள்ள நிலவரப்படி இங்குள்ள மொத்த உண்டியல் காணிக்கை நாணயங்களையும் எண்ணி முடிக்க மேலும் 10 நாட்கள் ஆகும் என தெரிகிறது.

Tags:    

Similar News