இந்தியா

கேரள அரசியலில் சர்ச்சையான சபரிமலை தங்கத் தகடு விவகாரம்.. சட்டமன்றம் முடக்கம் - போராட்டக்காரர்கள் கைது

Published On 2025-10-09 15:48 IST   |   Update On 2025-10-09 15:48:00 IST
  • தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  • கடந்த 30 ஆண்டுகால கோவில் ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியறுத்தினர்.

சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அம்மாநில பா.ஜ.க.வினர் கோழிக்கோட்டில் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். மேலும் பாலக்காட்டிலும் பாஜகவினர் போராட்டம் நடைபெற்றது. 

இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக வேண்டும், கடந்த 30 ஆண்டுகால கோவில் ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது

பாலக்காடு மற்றும் கோழிக்கோட்டில் நடந்த போரட்டங்களின்போது பாஜகவினரை களைந்து செல்ல அறிவுறுத்தியும் களைந்து செல்லாததால் போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாஜகவினர் பலர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே அமைச்சர் வாசவன் பதவி விலகக் கோரி இன்று சட்டமன்றக் கூட்டத்திலும் அமளி ஏற்பட்டது. இதனால் கேரள சட்டமன்றம் தொடர்ந்து நான்காவது நாளாக முடக்கியது.  மேலும் அவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

Tags:    

Similar News