பஞ்சாயத்து கூட்டத்தில் ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்
- மாவட்ட கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் 30 பேர் கலந்து கொண்டனர்.
- கணக்கு பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.
அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்களில் ஆடம்பரமாக செலவிடுவது ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கத்தான் செய்கிறது. மக்களின் வரி பணம்தானே செலவு செய்கிறோம் என்ற அலட்சிய எண்ணத்துடன் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் செய்தி அவ்வப்போது வருகிறது.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் செலவிடப்பட்டுள்ள கணக்கு பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசம், பாத்வாகி கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் 30 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு நொறுக்குத்தீனிகள், பழங்கள் ஆகியவை பரிமாறப்பட்டது. கூட்டத்தில் ரூ.85 ஆயிரத்துக்கு சாப்பிட்டதற்காக கணக்கு பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 கிலோ முந்திரி, 3 கிலோ உலர் திராட்சைகள், 3 கிலோ பாதம் கொட்டைகள், 9 கிலோ ஆப்பிள், ஆரஞ்சு, திராட்டை பழங்கள், 5 டஜன் வாழைப்பழம், 30 கிலோவுக்கு மிக்சர், பூந்தி, இனிப்பு வகைகள் முதலியவற்றுக்கு கணக்கு எழுதப்பட்டுள்ளது.
இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கணக்கு பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.