இந்தியா

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவில் சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

Published On 2025-07-22 10:29 IST   |   Update On 2025-07-22 12:26:00 IST
  • மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் ஜெகதீப் தன்கர் விலகியுள்ளார்.
  • நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது

குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், ஜெகதீப்தன்கர் ராஜினாமாவில் பல சந்தேகங்கள் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நேற்று பகல் 12.30-க்கு ஜெகதீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவையின் அளுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது. அவையின் ஆளுங்கட்சித் தலைவர் நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். மீண்டும் மாலை 4.30 கூட்டம் கூடியபோது, நட்டா, ரிஜிஜு அதில் பங்கேற்கவில்லை.

அதுகுறித்த தகவலும் தன்கரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தன்கர், இன்று பகல் 1 மணிக்கு கூட்டத்தை ஒத்திவைத்தார்.

நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது. இப்போது யாரும் எதிர்பாராத விதமாக தன்கர் ராஜினாமா செய்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News