ராகுல் காந்தி
நான் டி ஷர்ட் அணிவதற்கு இதுதான் காரணம் - ராகுல் காந்தி விளக்கம்
- இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி டி ஷர்ட் அணிந்து செல்கிறார்.
- பா.ஜ.க.வினர் தொடர்ந்து அவரது டி-ஷர்ட் தொடர்பான விவாதத்தை உருவாக்கி வருகின்றனர்.
புதுடெல்லி:
வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமான உறைய வைக்கும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியின் பல இடங்கள் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குச் சென்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடும் குளிரிலும் டி- ஷர்ட் அணிந்து நடந்து செல்கிறார் என்று பலரால் வியப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் பா.ஜ.க.வினர் தொடர்ந்து அவரது டி-ஷர்ட் தொடர்பான விவாதத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தான் டி ஷர்ட் அணிவது ஏன் என்பது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், மத்தியப்பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்ட போது 3 ஏழைச் சிறுமிகள் கந்தலான ஆடை அணிந்து என்னிடம் ஓடி வந்தனர். நான் அந்தச் சிறுமிகளை தொட்டபோது கடும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். நானும் அப்படி குளிரில் நடுங்கும் வரை டி ஷர்ட் மட்டுமே அணிவேன் என அந்நாளில் முடிவு செய்தேன். அன்றிலிருந்து டி ஷர்ட்டில் பாதயாத்திரை செல்கிறேன். டி ஷர்ட் மூலமாக அந்த வலியை வெளிப்படுத்துகிறேன் என தெரிவித்தார்.