இந்தியா

பிரியங்கா காந்தி

அனைத்து தலைநகரங்களிலும் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி - காங்கிரஸ் முடிவு

Published On 2022-12-04 22:47 GMT   |   Update On 2022-12-04 22:47 GMT
  • அனைத்து தலைநகரங்களிலும் மகளிர் பேரணியை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
  • இந்த மகளிர் பேரணி 2 மாதங்களுக்கு நடைபெறும் என அக்கட்சி தெரிவித்தது.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். இந்த பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். பிறகு அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் எங்களது கட்சி சார்பில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி நடத்தப்படும்.

இந்த மகளிர் பேரணி 2 மாதங்களுக்கு நடைபெறும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடையும்போது, அதன் தொடர்ச்சியாக, பிரியங்கா காந்தியின் மகளிர் பேரணி தொடங்கி நடைபெறும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News