இந்தியா

பஞ்சாப் ஓடையில் விழுந்து நொறுங்கிய பேருந்தில் சிக்கி 8 பேர் பலி: ஜனாதிபதி இரங்கல்

Published On 2024-12-28 00:21 IST   |   Update On 2024-12-28 00:26:00 IST
  • இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் தல்வாண்டியில் இருந்து பதிண்டா நோக்கி நேற்று பயணிகளை ஏற்றிவந்த பேருந்து, பாலத்தில் இருந்து ஓடையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பலத்த மழை பெய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவலறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று பேருந்திற்குள் சிக்கியவர்களை மீட்டனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரசு உதவிகள் வழங்கப்படும் என பதிண்டா துணை கமிஷனர் தெரிவித்தார்.

இந்நிலையில், பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News