இந்தியா

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை- தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

Published On 2024-03-03 16:21 GMT   |   Update On 2024-03-03 16:21 GMT
  • 17-வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைகிறது.
  • மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லி சாணக்ய புரியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று நடைபெற்றது.

பாரதீய ஜனதா கட்சியின் 2-வது ஆட்சிக் காலத்தில் இறுதியாக நடைபெறும் மத்திய அமைச்சர்கள் கூட்டம் இதுவாகும்.

தற்போதைய 17-வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைகிறது. தேர்தல் தேதிகள் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் மக்கள் நலப்பணிகளின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாரதீய ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. 

அடுத்த வாரம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடி வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்க பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி இன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் எந்தெந்த மாநிலங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. அப்போது 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறி பிரசாரத்தை தீவிரப் படுத்தும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

மேலும் பாரதீய ஜனதாவின் 2-வது வேட்பாளர்கள் பட்டியல் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News