இந்தியா

பள்ளியில் தனது சார்பாக வகுப்பு எடுக்க ரூ.6 ஆயிரம் ஊதியத்துக்கு பெண்ணை நியமித்த ஆசிரியர்- கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

Published On 2023-07-11 05:07 GMT   |   Update On 2023-07-11 05:07 GMT
  • வாரத்திற்கு 2 முறை மட்டுமே பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.
  • பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும், அவரை தலைமை ஆசிரியர் கண்டிக்கவில்லை என தெரிகிறது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டம் வாடி அருகே உள்ள பாலிநாயக் தாண்டாவில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மகேந்திரகுமார். இவர் வாரத்திற்கு 2 முறை மட்டுமே பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.

இந்த பள்ளியில் 25 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உள்ளனர். அங்கு தலைமை ஆசிரியராக அய்யப்ப குண்டகுர்த்தியும், ஆசிரியராக மகேந்திரகுமார் மட்டுமே வேலை செய்து வந்துள்ளனர்.

மகேந்திரகுமார் சரிவர பள்ளிக்கு வராததோடு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க தனது சார்பாக பெண் ஒருவரை நியமித்துள்ளார். இதற்காக அந்த பெண்ணுக்கு மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கி உள்ளார். இதுகுறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும், அவரை தலைமை ஆசிரியர் கண்டிக்கவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து கல்வித்துறை துணை இயக்குநரின் கவனத்துக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றனர்.

இது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து மகேந்திரகுமாருக்கு பொதுக்கல்வித்துறை துணை இயக்குநரகம் பணிக்கு திரும்ப வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிள்ளது. மாவட்ட அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதை குறித்து கல்வி அதிகாரி சக்ரப்பகவுடா பிரதார் கூறும்போது, ஒரு ஆசிரியராக ஆள்மாறாட்டம் செய்வது ஒரு குற்றமாகும். எனவே அந்த ஆசிரியர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News