இந்தியா

சட்டசபையில் உரையாற்றிய முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

இமாச்சல பிரதேசத்தில் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

Published On 2022-08-11 13:58 GMT   |   Update On 2022-08-11 13:58 GMT
  • ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.
  • 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபையில், பாஜகவுக்கு 43 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

சிம்லா:

இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று நம்பிக்கையில்லா தீமானம் கொண்டு வந்தது.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிஹோத்தி மற்றும் எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேசினர். ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்தனர்.

தீர்மானத்தை எதிர்த்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் அமைச்சர்கள் பேசினர். அப்போது, எதிர்க்கட்சிகள் உறுதியான பிரச்சனைகளை கொண்டு வரத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினர். விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பேசும்போது எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபையில், பாஜகவுக்கு 43 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளனர். இவர்கள் தவிர 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News