இந்தியா

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இரும்பு தூண் விழுந்து மாடல் அழகி பலி

Published On 2023-06-12 05:42 GMT   |   Update On 2023-06-12 05:42 GMT
  • விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
  • நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப்பட நகர் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று பேஷன்ஷோ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் ஏராளமான மாடல் அழகிகள் விதவிதமான ஆடை அணிந்து 'ரேம்ப்வாக்' வந்தனர்.

24 வயதான வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ரேம்ப்வாக் சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இரும்பு தூண் ஒன்று மேலிருந்து சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் வன்சிகா சோப்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

மின் விளக்குகளுக்காக அந்த இரும்புதூண் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், எதிர்பாராத விதமாக அந்த தூண் மேலிருந்து சரிந்து விழுந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பாபிராஜ் என்ற வாலிபர் காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பேஷன்ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர். 

Tags:    

Similar News