இந்தியா

போலி திருமண வலைதளம் மூலம் 500 பேரிடம் மோசடி செய்தவர் கைது

Published On 2024-12-03 12:25 IST   |   Update On 2024-12-03 12:25:00 IST
  • பல்வேறு பெயர்களில் போலியாக மேட்ரி மோனியல் தளங்களை உருவாக்கி உள்ளார்.
  • அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு திருமண வரன் தொடர்பான விளம்பரங்களை செய்துள்ளார்.

ராய்ப்பூர்:

இணையதள வளர்ச்சியால் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த ஹரிஷ் பரத்வாஜ் என்பவர் இணையத்தில் திருமண வரன் தேடுபவர்களை குறிவைத்து நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் பல்வேறு பெயர்களில் போலியாக மேட்ரி மோனியல் தளங்களை உருவாக்கி உள்ளார். அதில், அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு திருமண வரன் தொடர்பான விளம்பரங்களை செய்துள்ளார்.

இதைப்பார்த்து தொடர்பு கொண்ட நபர்களிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி திருமண ஏற்பாடு வரை உதவுவதாக கூறி உள்ளார். இதற்காக பிலாஸ்பூர் மட்டுமல்லாது அலிகார், வாரணாசி உள்ளிட்ட இடங்களில் மையங்கள் அமைத்துள்ளார்.

அங்கு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தி வாடிக்கையாளர்களிடம் பேச செய்துள்ளார். அவர்களின் பேச்சில் மயங்கிய வாடிக்கையாளர்கள் திருமண வரனுக்காக லட்சக்கணக்கில் பணம் அனுப்பி உள்ளனர்.

இவ்வாறு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 500 பேரிடம் மோசடி செய்து ஏமாற்றி உள்ளார். இவரிடம் போபாலை சேர்ந்த ஒருவர் 47 வயதான ஒருவர் ரூ.1½ லட்சத்தை இழந்துள்ளார்.

அவர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்திய போது ஹரிஸ் பரத்வாஜ் போலியாக மேட்ரிமோனியல் தளங்களை உருவாக்கி 500-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்தது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மோசடி தொடர்பாக அவரது வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.

Tags:    

Similar News