இந்தியா

மத்திய பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் சம்பள பணத்தில் ரூ.230 கோடி ஊழல்?

Published On 2025-06-06 15:00 IST   |   Update On 2025-06-06 15:00:00 IST
  • அரசு ஆவணங்களில் அந்த ஊழியர்களுக்கு பணியாளர் குறியீடு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.
  • ம்பள பணம் எடுக்கப்படாததால் அவர்கள் போலி ஊழியர்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.

போபால்:

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக மோகன் யாதவ் உள்ளார்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் சம்பள பணத்தில் ரூ.230 கோடி ஊழல் நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 50 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இந்த 50 ஆயிரம் ஊழியர்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருப்பதாகவும், ஆனால் அவர்களின் சம்பளம் கடந்த டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

அரசு ஆவணங்களில் அந்த ஊழியர்களுக்கு பணியாளர் குறியீடு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. ஆனால் சம்பளம் வழங்கப்படாததால் இந்த ஊழியர்கள் ஊதியம் பெறாத விடுப்பில் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்களா? என்ற தகவல் இல்லை.

அதேவேளையில் இவர்கள் போலியாக உருவாக்கப்பட்ட ஊழியர்களா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதன்மூலம் ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் ரூ.230 கோடி மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சம்பள பணம் எடுக்கப்படாததால் அவர்கள் போலி ஊழியர்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதையடுத்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் யாரும் பணி புரியவில்லை என்பதைச் சான்றளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பெரும் தொகை சம்பளத்தில் போலி பெயர்களைச் சேர்த்து மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News