இந்தியா
null

போர் நிறுத்தம் போல வர்த்தக ஒப்பந்தத்தையும் டிரம்ப் அறிவிப்பதா? - மத்திய அரசை விளாசிய காங்கிரஸ்

Published On 2026-02-03 11:34 IST   |   Update On 2026-02-03 11:45:00 IST
  • வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரில்' செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
  • இந்திய தொழில், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும், இது இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையை எவ்வாறு பாதிக்கும் என்பதை விரிவாக விளக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ x தளப் பதிவில், "போர் நிறுத்தத்தை போல, இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் வெளியிட்டார். இந்த வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரில்' செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

• அமெரிக்காவிற்கு எதிரான சுங்க வரி மற்றும் சுங்க வரி அல்லாத தடைகளை இந்தியா 'பூஜ்ஜியமாகக்' குறைக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். அமெரிக்காவிற்காக நமது சந்தையை முழுமையாக திறக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இது இந்திய தொழில், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும்.

• அந்த அறிக்கையில் விவசாய துறையை அமெரிக்காவிற்காக திறப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உண்மையில் என்ன? நமது விவசாயிகளின் பாதுகாப்பும் நலன்களும் எவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளன?

• மோடி அரசாங்கம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காமல், அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு மோடி அரசாங்கம் ஒப்புக்கொண்டதா?

• மேலும், அமெரிக்காவிடம் இருந்து அதிக பொருட்களை வாங்குவது குறித்தும் பேசப்படுகிறது. அப்படியானால், 'மேக் இன் இந்தியா' திட்டம் என்ன ஆனது?

இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை தெரிந்துகொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு.

மோடி அரசாங்கம் பாராளுமன்றத்தையும் ஒட்டுமொத்த நாட்டையும் நம்பிக்கையில் எடுத்துக்கொண்டு, அனைத்து விவரங்களையும் பகிர வேண்டும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News