இந்தியா

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.11 குறைப்பது பற்றி ஆலோசனை

Published On 2024-01-24 05:56 GMT   |   Update On 2024-01-24 06:57 GMT
  • இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
  • டீசல் விலையை ரூ.6 குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவுக்கு குறைந்து வருகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர் வீழ்ச்சி காரணமாக பெட்ரோல்-டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை.

பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யாத நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்பதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவை விட அதிகளவு வருவாய் பெற்றன.

இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கலாமா? என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலருக்கும் கீழ் வந்துள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில் இதுபற்றி ஆய்வு செய்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கலாம் என கருதின. அது போல டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கலாம் என திட்டமிட்டன.

ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.11 வரை குறைப்பது பற்றி ஆய்வு செய்து வருகின்றன. மேலும் டீசல் விலையை ரூ.6 குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அறிவிப்பை பிப்ரவரி 1-ந்தேதி வெளியிட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. எனவே பெட்ரோல்-டீசல் விலை எந்த அளவுக்கு குறையும் என்பது அடுத்த வாரம் தெரியும்.

Tags:    

Similar News