இந்தியா

மோடி தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதா?: நான் கேட்பதெல்லாம் இது ஒன்றுதான்... ஒவைசி

Published On 2024-02-11 05:21 GMT   |   Update On 2024-02-11 05:21 GMT
  • ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவர்களுக்கானதா? அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கானதா?
  • தீர்மானத்தின் மூலம், மற்ற மதங்களை தாண்டி ஒரு மதத்தின் வெற்றி குறித்த செய்தியை இந்த அரசு வெளியிடுகிறதா?.

பாராளுமன்றத்தில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பகவான் ராமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், நாதுராம் கோட்சேவை வெறுக்கிறேன். ஏனென்றால், அவரால் கொல்லப்பட்ட நபர் கூறிய கடைசி வார்த்தை ஹேம் ராம்.

இன்று நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். மோடி தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதா?. ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவர்களுக்கானதா? அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கானதா? இந்த அரசு சொந்த மதத்தை கொண்டுள்ளதா?. இந்த அரசு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. இந்த நாடு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காகவும் நிற்காது, நிற்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்.

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடந்த நிகழ்வு குறித்த இந்தத் தீர்மானத்தின் மூலம், மற்ற மதங்களை தாண்டி ஒரு மதத்தின் வெற்றி குறித்த செய்தியை இந்த அரசு வெளியிடுகிறதா?. நாட்டிலுள்ள 17 கோடி முஸ்லிம்களுக்கு இதைவிட இந்த அரசு தெரிவிக்கும் பெரிய செய்தி என்ன?" என்றார்.

மேலும், முஸ்லிம் தலைவர்களின் படையெடுப்பு மற்றும் ஆட்சிக்குப் பிறகு, சிறுபான்மையினர் பிரிவில் இருந்து வந்த தலைவர்கள் என பா.ஜனதாவால் முத்திரை குத்தப்பட்டு வரும் நிலையில் "நான் என்ன பாபர், ஜின்னா அல்லது அவுரங்கசீப்பின் செய்தி தொட்பாளரா?" என கடுமையாக தாக்கி பதில் அளித்தார்.

Tags:    

Similar News