கடும் பனிமூட்டம் கவுகாத்தி விமானம் வங்காளதேசத்தில் தரையிறக்கம்
- விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது.
- சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கவுகாத்தி:
மும்பையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் 178 பயணிகள் இருந்தனர். அப்போது கவுகாத்தியில் கடும் பனிமூட்டம் நில வியதால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு டாக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து விமான நிறுவனம் கூறும்போது, "கவுகாத்தியில் மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து கவுகாத்திக்கு சென்ற இண்டிகோ விமானம் வங்காளதேசத்தின் டாக்காவிற்கு திருப்பிவிடப்பட்டது.
டாக்காவில் இருந்து கவுகாத்திக்கு விமானத்தை இயக்க மாற்றுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.