இந்தியா

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி- கடற்படை அதிகாரி எனக்கூறியவர் கைது

Published On 2023-07-29 10:07 IST   |   Update On 2023-07-29 10:55:00 IST
  • கடற்படையில் தளபதியாக வேலை செய்து வருவதாக கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார்.
  • வேலையில்லா பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சூர்யா சலபதி ராவ். இவர் கடற்படையில் தளபதியாக வேலை செய்து வருவதாக கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார் .

விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தார்.

மேலும் போலியான சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கினார்.

இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கடற்படை வளாகத்தில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யும் பணி கடந்த புதன்கிழமை தொடங்கியது.

சூர்யா சலபதி ராவ் கொடுத்த போலி சான்றிதழ்களுடன் சிலர் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யும் முகாமில் கலந்து கொண்டனர் .அப்போது முகாமில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இதில் பல்வேறு பட்டதாரிகளின் சான்றிதழ்கள் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. போலி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டவர்களிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது சூர்யா சலபதி ராவ் சான்றிதழ் வழங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ராணுவ அதிகாரிகள் சூர்யா சலபதிராவை பிடித்து விசாரணை நடத்தியதில் போலி சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கியது தெரியவந்தது. ராணுவ அதிகாரிகள் இது குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சூர்யா சலபதி ராவை கைது செய்து அவரிடமிருந்து கார், கடற்படை அதிகாரிகளுக்கான உடைகள், செல்போன், லேப்டாப், போலி அடையாள அட்டை, போலி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் சூர்யா சலபதி ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News