இந்தியா

குஜராத் சட்டசபை தேர்தல்- பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குப்பதிவு

Published On 2022-12-01 10:31 GMT   |   Update On 2022-12-01 10:31 GMT
  • இளம் வாக்காளர்கள் முதன் முதலாக ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
  • மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

அகமதாபாத்:

பிரதமர் மோடி , மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத்தில் இன்று (1-ந்தேதி) முதல் கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது.

இதையொட்டி 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் அதிகாலையில் இருந்தே ஜனநாயக கடமையாற்றுவதற்காக திரண்டு இருந்தனர். பெண்கள் ஓட்டுபோட அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இளம் வாக்காளர்கள் முதன் முதலாக ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஓட்டு போட்டபின் அவர்கள் கையில் வைத்த மையுடன் செல்போனில் செல்பி எடுத்து தங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

கிராம புறங்களில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் பட்டேல் தனது மனைவியுடன் நவ்காரி பகுதி வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார்.

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ராஜ்கோடு வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

காலை 9 மணி நிலவரப்படி 4.92 சதவீத ஓட்டுகளும், 11 மணி நிலவரப்படி 18.95 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடக்கிறது.

27,978 தலைமை அதிகாரிகளும்,78, 985 வாக்குப்பதிவு அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்ட தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைகிறது. பின்னர் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இன்று நடந்து வரும் முதல்கட்ட தேர்தலில் 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.39 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இதில் ஆண்கள் 1,24 கோடி பேர். பெண்கள் 1.15 கோடி பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 497 பேர் உள்ளனர்.

குஜராத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) இறுதி கட்ட தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 8- ந்தேதி நடக்கிறது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவி உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக யாரும் அசைக்க முடியாத அளவுக்கு பாரதிய ஜனதா தொடர்சியாக 6 முறை வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனால் 7-வது தடவையாக வெற்றி கனியை பறிக்கும் வகையில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அதற்கு ஏற்றாற் போல் அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தை சேர்ந்த முதல்-மந்திரிகள் , மத்திய மந்திரிகள் முகாமிட்டு வலுவான பிரசாரத்தை மேற்கொண்டனர்.

இன்று நடக்கும் சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 89 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ள ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளில் களம் இறங்கி உள்ளது. இதைதவிர பகுஜன் சமாஜ் கட்சி பாரதிய பழங்குடியினர் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் இசுதான் கட்வி, அக்கட்சியின் மாநிலத்தலைவர் கோபால் இட்டாலியா, ரவீந்திரஜடஜாவின் மனைவி ரிவபா மற்றும் 5 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள புருஷோத்தமன் சோலங்கி உள்ளிட்டவர்கள் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள்.

இன்று தேர்தல் நடந்து வரும் கட்ச் மற்றும் சவுராஷ்டிரம் பகுதியில் மட்டும் 54 தொகுதிகள் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா 23 இடங்களிலும் காங்கிரஸ் 30 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

இதனால் இந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற இரு கட்சிகளும் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டது. தெற்கு குஜராத்தில் சூரத் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் முழு பலத்துடன் களம் இறங்கி உள்ளதால் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதாவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News