இந்தியா

இந்தியாவை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டேன் - ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் குற்றச்சாட்டு

Published On 2024-04-24 11:19 GMT   |   Update On 2024-04-24 11:36 GMT
  • நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது
  • ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை

ஏ.பி.சி. எனப்படும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்நிறுவனத்துக்காக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை அவனி தியாஸ் சமீபத்தில் வெளியிட்டார்.

ஏ.பி.சி., நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியான நிஜ்ஜார் கொலை குறித்த இந்த வீடியோ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில் இதை எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசாவை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்று அவனி தியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவனி தியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்தி சேகரிக்கும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

இதனால், ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை. பின், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், "ஆஸ்திரேலியாவில் அவருக்கு வேறொரு வேலை கிடைத்தது. அதற்காக தான் அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் வெளியேறவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அவர் வெளியேறினார்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News