இந்தியா

Noge, eare, iey- தவறாக பாடம் கற்பித்த ஆசிரியர்- வைரலாகும் வீடியோ

Published On 2025-11-19 11:34 IST   |   Update On 2025-11-19 11:34:00 IST
  • வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
  • இச்சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கும், மருத்துவத்துக்கும் மட்டுமே அதிக செலவாகிறது. இதிலும் பிள்ளைகளின் கல்விக்காக மழலையர் வகுப்பு தொடங்கி பட்டயப்படிப்பு வரை பெற்றோர் செய்யும் செலவு சொல்லி மாளாது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து, வளர்ந்து, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையில் தான் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் சத்தீஸ்கரில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து வெளியாகி உள்ள வீடியோ, மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே அடிப்படை கற்றல் கூட தெரியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியரான கமலேஷ் பாண்டே தொடக்கப் பள்ளியில் ஆங்கில வகுப்பை எடுக்கிறார். அப்போது, Friday-க்கு பதில் FarDay, என்றும் Saturday-க்கு பதில் Saterday என்றும் பலகையில் எழுதுகிறார். Father, Mother, Brother, Sister என்று குடும்ப உறுப்பினர் சொற்களுக்கு முறையே Farder, Mader, Barpr, Sester என்றும், அதேபோல் Nose, Ear, Eye-க்கு பதில் Noge, eare, iey என்று கரும்பலகையில் எழுதி மாணவர்களையும் சொல்லச் சொல்லி நோட்டில் எழுதிக்கொள்கின்றனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

இதனிடையே, தொடக்கப்பள்ளியில் 42 குழந்தைகள் படித்து வருவதாகவும், அவர்களுக்கு கல்வி கற்க இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் அடிக்கடி பள்ளிக்கு குடிபோதையில் வந்து வகுப்பு நேரங்களில் தூங்குவதாகவும், மற்றொருவர் தவறான எழுத்துப்பிழைகளைக் கற்பிப்பதாகவும் கிராமவாசிகள் குற்றம் சாட்டினர்.

இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News