வங்கதேசத்தில் துர்கா கோவில் இடிப்பு.. மத்திய அரசு கண்டனம்
- சட்டவிரோத நிலப் பயன்பாடு என்று சித்தரித்து, இடிப்பை அனுமதித்ததாக ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டினார்.
- 2026ல் காலாவதியாகும் 1996 கங்கை நதி நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து வங்கதேசத்துடன் பேச இந்தியா தயாராக உள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் துர்கா கோயில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேச இடைக்கால அரசு, அந்நாட்டின் இந்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் மத நிறுவனங்களைப் பாதுகாக்கத் தவறியதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இடிக்கப்பட்ட கோயிலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, இடைக்கால அரசு அதை சட்டவிரோத நிலப் பயன்பாடு என்று சித்தரித்து, இடிப்பை அனுமதித்ததாக ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டினார்.
வங்கதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வது வருத்தமளிக்கிறது என்றும் இந்துக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களைப் பாதுகாப்பது வங்கதேச இடைக்கால அரசின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 2026ல் காலாவதியாகும் 1996 கங்கை நதி நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து வங்கதேசத்துடன் பேச இந்தியா தயாராக உள்ளது.
வங்கதேசத்தின் நில துறைமுகங்கள் வழியாக சில ஏற்றுமதிகளுக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள், நியாயம், சமமான அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையிலானவை என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
ஆயத்த ஆடைகள் மற்றும் சில நுகர்வோர் பொருட்கள் உட்பட வங்கதேசத்தின் சில ஏற்றுமதிகளுக்கு இந்தியா கடந்த மாதம் கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.