இந்தியா

வல்லவனுக்கு செங்கலும் ஆயுதம்... துப்பாக்கியால் மிரட்டிய நபரை துணிச்சலுடன் மடக்கிய கான்ஸ்டபிள்

Published On 2023-04-05 12:50 GMT   |   Update On 2023-04-05 12:50 GMT
  • ஒரு நபர் துப்பாக்கியுடன் வந்து, சாலையில் வந்துகொண்டிருந்த பைக்கை நிறுத்தி ஏற முயற்சி செய்தார்.
  • கான்ஸ்டபிள் மனோஜ் பாய்ந்து சென்று அந்த நபரை பிடித்து தரையில் தள்ளினார்.

புதுடெல்லி:

டெல்லியில் சினிமா பாணியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், துப்பாக்கியுடன் மிரட்டிய குற்றவாளியை தைரியமாக எதிர்கொண்டு மடக்கிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி நிலோதி பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. தலைமைக் காவலர்கள் மனோஜ், தேவேந்தர் ஆகியோர் நேற்று இரவு நிலோதி பகுதியில் உள்ள மச்சி சவுக் அருகே ரோந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு நபர் துப்பாக்கியுடன் வந்து, சாலையில் வந்துகொண்டிருந்த பைக்கை நிறுத்தி ஏற முயற்சி செய்தார். இதைக் கண்ட போலீசார் அந்த நபர்களை பிடிக்க முயன்றனர்.

பைக்கில் வந்த நபர் தப்பிச் செல்ல, துப்பாக்கி வைத்திருந்த நபர், கான்ஸ்டபிள் மனோஜை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினான். ஆனால் கான்ஸ்டபிள் மனோஜ் ஒரு செங்கல்லை எடுத்து வீசி தாக்கினார். அத்துடன் பாய்ந்து சென்று அந்த நபரை பிடித்து தரையில் தள்ளினார். உடனே அருகில் இருந்தவர்களும் ஓடிவந்து அந்த நபரை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார். பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற நபரை மற்றொரு கான்ஸ்டபிள் தேவேந்தர் பிடித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News