இந்தியா

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு!

Published On 2025-09-12 06:33 IST   |   Update On 2025-09-12 06:33:00 IST
  • ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
  • சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

பாராளுமன்ற மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்

இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் , அப் பதவிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தப்பட்டது.

இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர்.

இதில், சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.

துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதை ஒட்டி, சி.பி.ராதாகிருஷ்ணன் தான் வகித்து வந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News